புற்று நோயில் மீண்டுள்ள நடிகை மனிஷா கொய்ராலா அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

புற்று நோய் வாழ்க்கையில் இருந்து மீண்டுள்ள நடிகை மனிஷா கொய்ராலா, புற்றுநோய் குறித்த பொது விழிப்புணர்வை மக்களுக்கு பரப்புவதற்கு தனது கணிசமான நேரத்தை செலவிட்டு வருகிறார் .

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா, நேபாளத்தின் 22வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ‘சவுதகர்’ மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் பாலிவுட்டில் “தில் சே” “பம்பாய்” போன்ற பெரிய வெற்றிகளைப் பெற்றார். இவர் பாலிவுட்டில் மட்டுமின்றி நேபாளி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர்.

சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது 2012ல், கண்டறியப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த நம்பிக்கையோடு சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தவர். தற்போது மிகவும் உற்சாகமாகியுள்ள மனிஷா கொய்ராலா புற்றுநோய் குறித்த பொது விழிப்புணர்வை பரப்புவதற்கு தனது கணிசமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மனீஷா கொய்ராலா, நைனிடாலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இமயமலை சுற்றுச்சூழல் இலக்கிய கலை விழாவில் கலந்துகொண்டார். அதில் ரசிகர்கள் அவரது புற்றுநோய் பற்றிய வேதனை வாழ்க்கையை பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மனிஷா,”நான் கடந்து வந்ததை நானே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, மக்களுக்கும் புரியவைக்க வேண்டியிருந்தது. அதனால்தான் என் வாழ்க்கையை ”Healed”How Cancer Gave Me a New Life’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினேன் என்று கூறினார். ஒருவேளை என்னை யாராவது இவர் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர் என்று முத்திரை குத்தினால் அதைப்பற்றி துளியும் கவலைப் படமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒரு ரோஜா தனது நிறத்தை முற்றிலுமாக இழக்கப்போகிறது என்பதை உணர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதாக கூறிய அவர், எனது ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ஆல்கஹாலால் நிரப்பப்பட்டதே, வாழ்க்கை மோசமாக மாறியதற்கு காரணம் என்பதை புத்தகத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இது எல்லாம் வாழ்க்கையா? என்ற கேள்வியை நான் எதிர்கொண்டேன். எனது இந்த 40 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன்? ஒன்றுமேயில்லை. இப்போதுதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் குறைகள் என்பது உடம்பில் இல்லை மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ள மனிஷா சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு உந்து சக்தியே ஆவார்.

Exit mobile version