இரு வேறு இடங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்-போலீசார் தீவிர விசாரணை

பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் 90 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஹேமச்சந்திரா நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கமல் அவரது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதே போல செங்குன்றம் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் வாசுதேவன் என்ற வழக்கறிஞர் வீட்டிலும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. 20 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 35ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து, மீஞ்சூர் மற்றும் செங்குன்றம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version