110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றம்: முதலமைச்சர் பெருமிதம்

சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் , 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ்  ஆயிரத்து 55 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அனைத்து அறிவிப்புக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 822 அறிவிப்புக்கான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 230 திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போல் 2017 முதல் தற்போது வரையிலான மூன்று ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 417 அறிவிப்புக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 114 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 303 திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை 34 ஆயிரத்து 853 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பில் 47 ஆயிரத்து 828 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Exit mobile version