மும்பை தாக்குதலில் தொடர்புடைவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு -அமெரிக்கா

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நாட்டின் செயலாளர் மைக்கேல் ஆர்.போம்பியோ, மும்பை தாக்குதல் நடத்தப்பட்டதன் 10 ஆண்டு நினைவுநாளில், மும்பை நகர மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் அமெரிக்க அரசு சார்பில் அனுதாபங்களை தெரிவித்துகொள்வதாக கூறினார்.

இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளதாக கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் மைக்கேல் ஆர்.போம்பியோ தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version