ஊரடங்கை நீட்டித்தால் பொதுமக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம்!

ஊரடங்கை நீட்டித்தால், பொது மக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம் என, மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் தற்போது வரை 4 ஆயிரத்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று பொதுமக்கள் தரப்பில் அஞ்சப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மகிந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பொருளாதார வீழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தாது, அது மன ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உளவியல் ரீதியாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஊரடங்கை நீட்டித்தால் மட்டும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்றும் கூறியுள்ளார். சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முதன்முதலில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட சமயத்திலும் ஆனந்த் மகிந்திரா அதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version