இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பிடியில் நேற்றைய தினம் இந்திய விமானி அபிநந்தன் என்பவர் சிக்கினார். அவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கியதை இந்திய அரசும் உறுதி செய்தது. மேலும் இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது.

பாகிஸ்தான் வசம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் டீ குடித்துக் கொண்டு பேசும் வீடியோவை நேற்றைய தினம் பாகிஸ்தான் வெளியிட்டது. அபிநந்தன் நிலை குறித்து இந்திய தரப்பு தொடர்ந்து கவனித்து வந்தது. இந்தநிலையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார்.அப்போது அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில்,  இந்திய விமானப்படையின்  விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். மேலும் இம்ரான்கான் எல்லையில் பதற்றத்தை நீட்டிப்பது எந்த வகையிலும் பயன் தராது என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version