"தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகிப்பதில் பெருமையாக இருப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு தனது செயல்பாடு இருக்கும் என்றும் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஆளுநர் பதிவியேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரும் பங்கேற்றனர். ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என்.ரவிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழில் வணக்கம் எனக்கூறி செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என். ரவி, உலகின் தொன்மையான, இன்னும் உயிர்ப்போடு உள்ள பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் உரிய தமிழ் மண்ணில் ஆளுநராக பதவியேற்றது பெருமை அளிப்பதாக தெரிவித்தார். தொன்மையான வளம் மிகுந்த தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றிருப்பது சவாலுக்கும் அப்பாற்பட்டது என்றும் தமிழ்நாட்டிற்கு சேவையாற்றுவது தான் தனது முதல் பணி என்றும் கூறினார். அப்போது, முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போல், மாவட்டந்தோறும் ஆய்வு செய்வீர்களா? என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், தேவைப்பட்டால் நிலைமையை பொறுத்து முடிவு செய்வேன் என்று விளக்கமளித்தார். மேலும், அரசியலமைப்பு கொடுத்துள்ள ஆளுநருக்கான விதிகளுக்குட்பட்டு செயல்பட உள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி உறுதியளித்தார். 

முன்னதாக ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் திமுக அரசு மரபைக் காக்கவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுகவினர், முதல் 7 வரிசைகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினருக்கே ஒதுக்கியிருந்தனர். முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு 8-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை விமர்சித்த அரசியல் நோக்கர்கள், கடந்த அதிமுக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்பின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையிலேயே இடம் ஒதுக்கியதாக குறிப்பிட்டனர்.

Exit mobile version