மனைவிக்கு மாப்பிள்ளை, களவாணி கணவனின் தியாக செயல்…

ராமநாதபுரத்தில், முதல் கணவரின் உதவியுடன், 3 திருமணங்கள் செய்து, வேலையின்றி தவித்த விஐபிக்களிடம் கோடிகளில் கைவரிசை காட்டியுள்ளார், கல்யாண ராணி ஒருவர்.. யார் அவர்..? பார்க்கலாம்.

 

”என்னை பார்த்தால் யோகம் வரும்” என்பதை போல, மங்களகரமாய் நிற்கும் இந்த சுடிதார் அணிந்த சொர்க்க வாசலின் பெயர், சவுமியா.

சில ஆண்டுகளுக்கு முன், சுரேஷ் என்பவருடன் திருமண வாழ்வை தொடங்கிய இந்த காதல் மேளம், கணவரின் பரிந்துரையின் பேரில், 2-வது திருமணம், கணவருக்கே தெரியாமால் 3 வது திருமணம் என கணக்கில்லாமல் கல்யான கச்சேரி நடத்தி வந்துள்ளது.

3 கணவர்களை கொண்ட முற்போக்காளராக இருந்தாலும், முதல் கணவர் மீது மட்டும் சவுமியாவிற்கு கரிசனம் அதிகம்.

ஏனெனில், அழகு முதலீட்டில், சவுமியா நடத்தி வந்த மோசடி பிஸினஸ் மொத்ததிற்கும் சூத்திரதாரி, சுரேஷ் தான்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், சவுமியாவின் அனைத்து வெற்றிக்கு பின்னால் இருந்தது, சுரேஷ் என்ற தியாக திருவுள்ளம்.

மனைவிக்கு மாப்பிள்ளை பார்ப்பது தொடங்கி, அந்த மாப்பிள்ளை வீட்டு பீரோவில் நகை குறைப்பு செய்வது வரை அனைத்திற்கு அவனே வழிகாட்டி.

திருமணம் ஆகா தீப்பந்தகளை, காதல் நீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வருவது, சவுமியா நடத்தும் மோசடி நிறுவனத்தின் மெயின் தொழில் எனில், விஐபி பாடலை ரிங் டோனாக வைத்து விரக்தியில் உழலும் வேலையில்லா 90’ஸ் கிட்ஸிடம், வேலை வாங்கித் தருவதவாக திருவிளையாடல் நடத்தி, பாக்கெட்டை பதம் பார்ப்பது இவர்களின் உப தொழில்.

தனது உறவினரான விஜய் என்பவரிடம் இருந்து, 14 சவரன் நகையை கடனாக வாங்கியுள்ளார் சவுமியா.

உரிமைதாரர் அதனை திருப்பிக் கேட்க, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரை முன் மொழிந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக அள்ளி விட்டுள்ளார்.

அதனை விஜய் நம்பியது மட்டுமல்லாது, தன் சக விஐபி நண்பர்கள் இருவரை நம்ப வைத்து, சவுமியாவின் சதுரங்க வேட்டைக்கு பகடை காய்களாய் சேர்ந்து விட்டுள்ளார். பிறகென்ன, 8 லட்சத்தை சூது கவ்வியதுதான் மிச்சம்.

நாட்கள் நகர்ந்தன. வேலையும் வரவில்லை, பணமும் வரவில்லை. எரிச்சல் அடைந்த விஐபி பாய்ஸ், சவுமியா குறித்து போலீசில் புகார் அளிக்க, அவரின் சதிவேலை அம்பலமானது.

தம்பதிகள் இருவரையும் தட்டித் தூக்கிய போலீஸ், தங்களது சிறப்பு வகுப்பை தொடங்கினர்.

அதில், சவுமியா தனது நிறுவனத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து பலரின் வயிற்றில் அடித்து, 63 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கை விலங்கு பூட்டி சிறைக்கு அனுப்ப பட்டனர்.

Exit mobile version