கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் சேதம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், அதிகாரிகள் எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன.

மேலும், கிளாவரை மலைக்கிராமத்தில், ஜெயப்பிரகாஷ், சிவாஜி, பாலமுருகன் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன.

வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது.

அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், சேத விபரங்கள் குறித்து ஆய்வு செய்யவும், நிவாரண உதவிகள் வழங்கவும் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன.

டவ்-தே புயல் காரணமாக, பந்தலூர், தேவாலா, சேரம்பாடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அமிர்தம் என்பவரது வீட்டின் மீது மரம் சாய்ந்த நிலையில், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர் காயங்களின்றி உயிர்தப்பினர்.

தகவல் அறிந்து வந்த கூடலூர் தீயணைப்புத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

Exit mobile version