வாரத்தில் 2 செல்போன்கள் திருடினால் விடுமுறை: சிக்கியது ஆந்திர கும்பல்

கார்ப்பரேட் நிறுவனம் போல் செல்போன் திருட பயிற்சி அளித்து , நிறுவனம் போன்று நடத்திய ஆந்திர கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.கடந்த வாரம் சென்னையில் சந்தேகப்படும்படியாக ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்த போது பூக்கடை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபரை விசாரணை மட்டும் செய்து வீட்டுக்கு அனுப்பி  உள்ளனர். ஆனால் அந்த ஆந்திர நபருக்கு பின்னால் இரண்டு காவலர்களை பின்தொடர அனுப்பி வைத்துள்ளனர். சோழாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் கையில் இருக்கும் செல்போனை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். வீட்டை சோதனை செய்ததில் தெலுங்கு செய்தித்தாள் அதிக அளவு வீட்டில் கிடந்துள்ளது…

பிடிபட்டவர்களை விசாரணை செய்தபோது ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை செய்ததில் ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் சென்னை முழுவதும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீசார் குறிவைத்து கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார்ப்பரேட் நிறுவனம் போல் செல்போன் திருடுவதற்கு என நிறுவனத்தை நடத்தி செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வந்த வாலிபர்களை செல்போன் திருட்டு தொழிலில் சேர்த்து ஆறு மாதம் பயிற்சி அளிப்பார். குறிப்பாக கூட்ட நெரிசலில் தெலுங்கு செய்தித்தாள் படித்துக் கொண்டே செல்போன் திருடுதல், கைக்குட்டையை பயன்படுத்தி செல்போனை திருடுதல், என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து நபர்களை திசை திருப்பி செல்போன்களை திருடுவது போன்ற பயிற்சியை இந்தக் கும்பலுக்கு ரவி அளித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது திங்கள் முதல் வெள்ளி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன்களை கும்பல் கும்பலாக பிரிந்து விட்டு நெரிசல்களில் திருடுவார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் செல்போன் திருட்டு பவர்களுக்கு விடுமுறை அளித்து விடுவார். மேலும் திருடும் நபர்களுக்கு இத்தனை செல்போன்களை திருட வேண்டும் எனவும் கார்ப்ரேட் நிறுவன டீம் லீடர் போல் டார்கெட் நிர்ணியிப்பார்.

அதுமட்டுமல்லாது அதிக செல்போன் திருடும் திருடர்களுக்கு போனசாக மூன்று செல்போன்களை கொடுத்து விடுவார். வேலை செய்வதற்கு முன்பாகவே சம்பளத்தைக் கொடுத்து திருடச் சொல்வது இந்த செல்போன் திருட்டு நிறுவனத்தின் கொள்கை என ரவி வாக்குமூலம் அளித்துள்ளான். குறைந்த பட்சம் வாரம் 50 செல்போன்கள் என கடந்த இரண்டு வருடங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய ரவி, நானி, ராகுல்ரவி, இயேசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராஜேஷ், ஆலா மகேஷ், பிண்டி வெங்கடேஷ், பிண்டி ராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 40 செல்போன்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மற்ற செல்போன்களை மீட்பதற்காகவும் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Exit mobile version