சரித்திரமாக வாழ்ந்துகாட்டியவர் இராம்விலாஸ் பாஸ்வான் – முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான இராம்விலாஸ் பாஸ்வான் டெல்லி மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான இராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (8.10.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

” மறைந்த பாஸ்வான், இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம்கொண்டு அரசியலுக்கு வந்தவர். அரசியல் மட்டுமின்றி, சமூக நீதிக்காவும் அயராது உழைத்தவர். ஏழ்மைநிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

நாடாளுமன்றத்தில் தன் கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்தமுறையிலும் பேசக்கூடியவர். இவர் தொழில்துறை, வேதிப்பொருள் மற்றும் உரத்துறை, தகவல்தொலைத்தொடர்புத் துறை உள்பட பல துறைகளில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். கொள்கைமாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளர்.” என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி,

” ’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் இராம்விலாஸ் பாஸ்வான். அவரின் மறைவு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அவருடைய கட்சித் தொண்டர்களுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.” என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version