நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம் -மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழக காவல்துறை விசாரிப்பது முறையாக இருக்காது என கூறி, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஆனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல எனக்கூறி, இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

Exit mobile version