சிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க, பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தன்னுடைய பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிடக்கோரியும் பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Exit mobile version