பா.ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் சில தினங்களுக்கு முன் மன்னர் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சையாக பேசியிருந்தார். இது குறித்து தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது ரஞ்சித்திற்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மன்னர் ராஜராஜ சோழன் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், மக்கள் மதிப்பு வைத்திருக்கும் மன்னர் குறித்து இதுபோன்று பேசலாமா என ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கில் வரும் புதன்கிழமை வரை ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கில் பதிலளிக்குமாறு திருப்பனந்தாள் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Exit mobile version