சூரியுடன் இனியும் நட்பு தொடராது – விஷ்ணு விஷால் அதிரடி

நடிகர் சூரியுடன் இனியும் நட்பு தொடராது என்று கூறியுள்ள நடிகர் விஷ்ணு விஷால், அனைத்து உண்மைகளையும் நிரூபித்து விட்டு புகார் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்ற படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிக்க சூரி ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்துள்ளன. சூரி சம்பளம் விவகாரம், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவிடம் சென்றுள்ளது.

அப்போது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத நிலத்தை தன்னிடம், விற்று 2 கோடியே 69 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது நடிகர் சூரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனைத்து உண்மைகளையும் நிரூபித்து விட்டு நடிகர் சூரி மீது புகார் அளிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளர். இது குறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், இனியும் நடிகர் சூரியுடன் நட்பு தொடராது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version