75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகரில் பலத்த பாதுகாப்பு

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டை, பல்முனை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் 75வது சுதந்திர தின கொண்டாட்ட விழாவில், செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுமார் 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினரும், ட்ரோன் அழிப்பு சாதனமும் பயன்படுத்தி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு முகமையின் துல்லிய துப்பாக்கி தாக்குதல் படையினர், ஸ்வாட் கமாண்டோக்கள், உயர்ந்த கட்டடங்களில் இருந்து துல்லியமாக தாக்கும் துப்பாக்கிப் படையினர், இந்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விமானப் படை தளத்தில், அண்மையில், பயங்கரவாதிகள் ட்ரோனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதால், முதல்முறையாக ட்ரோன் அழிப்பு சாதனமும் பாதுகாப்பில் பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, டெல்லி காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெல்லி முழுவதும் தீவிர வாகன சோதனைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version