மும்பையில் 4வது நாளாக கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் 4 வது நாளாக விடிய விடிய பெய்த பலத்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மும்பை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக மும்பையில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பல இடங்களில் மரம் மற்றும் சுவர் இடிந்து அந்த வழியாக நடந்து சென்றவர்கள், வாகனங்கள் மீது விழுந்தன. இதனால், பலர் காயமடைந்தனர். நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் தாதர், காந்தி மார்கெட் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்தனர். இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Exit mobile version