காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,900 கன அடியில் இருந்து 9 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரளா கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இரு அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 ஆயிரத்து 312 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒகேனக்கலில் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்தானது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 9 ஆயிரத்து 200 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 47.67 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version