வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், பருவமழை படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு விட்டு, விட்டு கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷண சூழல் நிலவியது.
இதே போல், நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்கலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென இடி- மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.