தமிழக மக்களுக்கு நல்லாட்சி – அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்

முதலமைச்சரும் , துணை முதலமைச்சரும் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக 47 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீட்டி தோட்டத்தில் நடைபெற்றது.

இதில் அமைப்புச் செயலாளர் பொன்னையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்கி வருவதாக கூறினார்.

குறை கூறியே ஆக வேண்டும் என்று ஊழல் வழக்குகளை திமுகவினர் தொடுத்து வருவதாகக் கூறிய அவர், அவை அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை என்றும், ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று குற்றம்சாட்டினார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அ.ராசா மற்றும் கனிமொழி மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை சம்பாதித்தக் கட்சி திமுக என்றும், அப்படிப்பட்ட கட்சி மக்கள் நலன் கொண்ட அதிமுகவை குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என பொன்னையன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆசியோடு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தலைமையில்,  சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசினை யாராலும் அசைக்க முடியாது என அவர் கூறினார்.

Exit mobile version