பிரதமர் மோடி தீபாவளி பரிசு – சிறுகுறு தொழில் முனைவோருக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை வங்கி கடன்

59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை நடுத்தர, சிறுகுறு தொழில் முனைவோருக்கு தீபாவளி பரிசாக அறிமுகப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடுத்தர, சிறுகுறு தொழில் முனைவோரை ஆதரிக்கும் விதமாக டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடுத்தர, சிறுகுறு தொழில் துறையை மேம்படுத்த 12 புதிய முடிவுகளை அரசு எடுத்திருப்பதாக கூறினார். அவைகளை தீபாவளி பரிசு என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது நடுத்தர, சிறுகுறு தொழில் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க உதவும் என்றார்.

குறிப்பாக 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை தீபாவளி பரிசாக அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு 2 சதவீதம் வட்டி மானியம் அல்லது தள்ளுபடி வழங்கப்படும் என அவர் கூறினார். மேலும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 20 மையங்கள் மற்றும் கருவிகளை வைப்பதற்கான 100 அறைகள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

Exit mobile version