தனுஷ், விக்ரமை தொடர்ந்து சிம்புவுடன் இணையும் கவுதம் மேனன்

ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகாத நிலையில், மூன்றாவதாக புதிய திரைப்படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் கவுதம் மேனன். மின்னலே படம் துவங்கி கடைசியாக வெளிவந்த அச்சம் என்பது மடமையடா வரை அவருடைய படங்கள் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால், ஒவ்வொரு படத்தையும் எடுக்கப்படுவதற்கான காலகட்டம், வெளியிடுவதில் சிக்கல் என ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்வதும் அவரது பாணி. அந்தவகையில் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் துவக்கினார் கவுதம். அதற்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் வெளியான நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா கிடப்பிலேயே உள்ளது. படபிடிப்பு முடிந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த படம் வெளிவராமல் உள்ளது.

இதேபோன்று விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படமும் துவக்கப்பட்டது. அந்த படம் நிதிச் சிக்கல், கால்ஷீட் குளறுபடி என அனைத்து சிக்கல்களையும் எதிர்கொண்டது. இந்த சூழ்நிலையில் சிம்புவை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கூறியுள்ளார் கவுதம்.

ஏற்கனவே எடுத்த படங்களை முதலில் கவுதம் மேனன் வெளியிடட்டும், பிறகு புதிய படத்தை இயக்கலாம் என திரையுலகைச் சேர்ந்த பலர் கூறி வருகின்றனர். இல்லையென்றால் இந்த புதிய படமும் வெளிவராத பட்டியலில் சேர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

Exit mobile version