கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு –  முதலமைச்சர் பாராட்டு

கஜா புயல் சீரமைப்பின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு, தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர், கஜா புயலின் தாக்கத்தால், 1 லட்சத்து 13 ஆயிரத்து 566 மின்கம்பங்கள் சேதமடைந்ததாகவும், இதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற பணியாளர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற பணியாளர், சீரமைப்பு பணியின் போது விழுந்து காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியும் வேதனை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

மின்கம்பத்தை சீரமைக்கும்போது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Exit mobile version