சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், மதுவுக்கு சைட் டிஷ் வாங்கி வராத நண்பனை, சக நண்பர்களே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரம் பகுதியை சேர்ந்தவர் அருமை கொடி. இவர் தனது பால்யகால சிநேகிதர்களான தாவீது மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து, மது அருந்தியுள்ளார். தொடக்கத்தில் மில்லியில் தொடங்கிய அவர்களின் மது விருந்து, ஒரு கட்டத்தில் லிட்டரை தாண்டி சென்றுள்ளது. இதனால், மூன்று குடிகார சிநேகிதர்களும் நிதானம் இழந்து, கிளைமேக்ஸாக பஞ்சாயத்தை கூட்ட தொடங்கினர்.

 

அருமை கொடி, மது வாங்க செல்லும் போது, சைட் டிஷ்ஷாக குடல் கறியும் வாங்கி வருவதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவசரத்தில் அந்த ஆட்டுக் குடல் மேட்டரை அவர் மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை, தொடக்கத்தில் அவரது நண்பர்களும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால், போதை தலைக்கேறி, பாதை மாறிய பிறகுதான், குடல் கறி விவகாரம் நண்பர்களிடையே கொளுந்து விட்டு எரியத் தொடங்கி இருக்கிறது.

 

குடல் கறி வாங்கி வராத பாவத்துக்கு, பாவ மன்னிப்பே கிடையாது என்பது போல, சைட் டிஷ் பஞ்சாயத்தை தாவீது ஊதிப் பெரிதாக்க, செல்வராஜும் அவருடன் இணைந்து அருமைக் கொடியை அணை கட்டத் தொடங்கியுள்ளார். இதனால் உக்கிரமான அவர், ”சரக்கு என் காசில வாங்குனேன், சைட் டிஷ் கூட உங்க காசுல வாங்க முடியாதா..? “ எனக் கேட்டு, நண்பர்களின் தன்மானத்தை சீண்டியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், அருமை கொடியை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர். தரையில் விழுந்து துடி துடித்த அவர் தலை மீது கல்லை போட்டு, கொலை செய்தனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றியதோடு, உடல் அருகில் போதையில் மயங்கி கிடந்த அந்த பாசம் மிகுந்த பால்ய சிநேகிதர்களையும் கைது செய்து, கம்பி அறைக்கு அழைத்துச் சென்றனர். புட்டி தொட்டதால் புத்தி கெட்டுப் போன இந்த நண்பர்களின் கதை, வார இறுதியில் பார்ட்டி பாட்னர் தேடும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

Exit mobile version