உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவச அனுமதி : மத்திய அரசு பரிசீலனை

உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும், ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இச்சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிக்க, 400க்கும் மேற்பட்ட இடங்களில், சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் 46 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, சுங்கச்சாவடிகளை அகற்றப் போவதாக, பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பின்னர், அது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால், அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

Exit mobile version