முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பிறந்ததினம் இன்று

மனிதனை மனிதன் அடிமையாக்கும் அடிமை  முறையினை ஒழிப்பதற்கு பாடுபட்ட ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவின் ஒரு தேவலாயத்தில்  பிரார்த்தனைக் கூட்டம்  நடந்து கொண்டிருந்த்து. கூட்டம் முடிந்ததும், உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்’’ என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஒருவர் மட்டும் பேசாமல் நின்றார்.

நீங்கள்  எங்கே போவதாக உத்தேசம்? எனப் பாதிரியார் அவரிடம் கேட்க, நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்’’ என்று உறுதியான குரலில் சொன்னார் அவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

1809ம் வருடம், அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே கூறலாம். பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார் லிங்கன் .ஒரு கடையில்  வேலை செய்துக்கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.

இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோதுதான், அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தாலும், காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை  லிங்கன் இவற்றை ஒழிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்.   ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று உணர்ந்தார் லிங்கன், காலங்கள் கடந்தது….  தனது 22-வது வயதில் ஒரு நகராட்சித் தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்துபோயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள். நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என்றார் சாரா புஷ்.

லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத் தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தைச் சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப் படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, 1834 ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின், நகராட்சித் தலைவர்,  செனட் உறுப்பினர்,  என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு, சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்தித்து, 1860-ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.  எதுவாக மாற நினைத் தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்.

லிங்கனின் இல்வாழ்விலும் அவருக்குத் தோல்வி கள்தான்! 1835-ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33 வயதில் மேரி என்ற பெண்ணை  திருமணம் முடித்தார், இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று பேர் சிறு வயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதியானதும், அதிரடி நடவடிக்கை எடுத்து, அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ இது  லிங்கனின் வார்த்தைகள். இது அவருக்கான வார்த்தைகள் மட்டும்மல்ல
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக போராடும் ஒவ்வொருவருக்குமான மந்திரம் சொற்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை ..

Exit mobile version