ஏழை மாணவியின் கல்லூரி படிப்புக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்-ஆசிரியர்கள்

கல்லூரி படிப்புக்கு தவித்து வந்த ஏழை மாணவி ஒருவருக்கு, அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், முன்னாள் ஆசிரியர்களும் இணைந்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்த மாணவி ரீனா. இவருக்கு ரெமுனா என்ற சகோதரியும், ஸ்டீபன் என்ற சகோதரரும் உள்ளனர். பெற்றோர் உயிரிழந்த நிலையில், ரீனாவையும், ஸ்டீபனையும் அவரது சகோதரி ரெமுனா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இருவரையும் காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ரீனா கல்லூரி படிப்பை தொடர பண வசதி இன்றி தவித்து வந்தார். இதனை அறிந்த தூய அந்திரேயர் பள்ளியில் 2000வது ஆண்டில் படித்த மாணவர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ரீனாவின் கல்லூரி படிப்புக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கி உதவி செய்தனர்.

Exit mobile version