தனியார் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் கல்லூரி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரி சாந்தி என்பவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார். ஹரி சாந்தி பணியில் இருந்து நின்ற பிறகும் அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்று காலை கல்லூரிக்கு வந்த அவர், முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறையில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டபடி சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இறந்த ஹரிசாந்தியின் இடது கையின் மணிக்கட்டு அருகே கத்தியால் கிழித்துக் கொண்ட ரத்தக் காயம் இருந்துள்ளது. இதனால் இது கொலையா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் கல்லூரியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version