தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு!

அதிமுக முன்னள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்தனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வெல்வது உறுதி என்று தமாகா தலைவர் தெரிவித்திருந்தார்.

தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் சூளமேட்டிலுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்திற்கு சென்று  தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தாம்பரத்தில் இருக்கக்கூடிய புரட்சி பாரதம் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியை சந்தித்தனர். இச்சந்திப்பானது ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கும் விதமாக நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடைத்தேர்ந்தலில் அதிமுக நிச்சயமாக வெல்லும் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version