உச்சநீதிமன்ற உத்தரவின்படி 14 பேரை கொன்ற பெண் புலியை வனத்துறையினர் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில் 14 பேரை கொன்ற பெண் புலி அவ்னியை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

மகாராஷ்டிரா வனப்பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களில் 14 பேரை அவ்னி என்ற பெண்புலி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவ்னியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். புதிய தொழில்நுட்பங்களுடன் 150 ஊழியர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் கடந்த 3 மாதங்களாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவ்னி குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அவ்னியை கண்டவுடன் சுட கடந்த செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டனர். இதையடுத்து அவ்னியின் நடமாட்டம் அதிகமாக இருந்த யவத்மால் வனப்பகுதிகளில் வனத்துறையினர் தங்களது தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.

இதையடுத்து, யவத்மால் வனப்பகுதியில் நேற்று அவ்னியை வனத்துறை ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். அவ்னிக்கு 10 மாதத்தில் இரண்டு குட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version