தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல்

இன்று நடைபெற உள்ள தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வனத்துறைக்கு 445 கோடி ரூபாயும், சுற்றுச்சூழல் துறைக்கு 31 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கடந்த 28 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டபேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, துறை மீதான மானிய கோரிக்கை, தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக, தமிழகத்தில் தற்போது உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அதற்கான பதில்களை முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் வழங்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்வார். சுற்றுச்சூழல் துறை தொடர்பான கோரிக்கையை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தாக்கல் செய்யவுள்ளார்.

Exit mobile version