மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, அமெரிக்க டாலர் உள்பட ரூ.1.20 கோடி மதிப்புடைய பணத்தை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் கடத்தல் நடப்பதாக,சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரபிக் ராஜா என்பவர் கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது, அதில் அமெரிக்க டாலர், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 89 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையைச் சேர்ந்த பிரேம் நசீர் என்பவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில், 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் சுங்க இலாக பிரிவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version