சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை, ஜூலை மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், குற்றம்சாட்டவர்களிடம் பதிலை பதிவு செய்யும் நடைமுறைக்காக, சசிகலா மற்றும் பாஸ்கரனை நேரில் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சசிகலா தொடர்ந்த வழக்கில், அதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக, வழக்கு விசாரணை ஜூலை மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலா வீடியோ கான்பரன்சிங் மூலமும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version