ஒரு மாதமாக முள்ளிமலைப்பகுதியில் சுற்றித் திரிந்த கரடி பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், முள்ளிமலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம், முள்ளிமலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாகக் கரடி ஒன்று சுற்றி வந்தது. இந்தக் கரடி அங்குள்ள கோவில்களில் வைத்துள்ள எண்ணெய்கள், அங்கன்வாடியிலுள்ள அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களைச் சாப்பிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது. மேலும் தேயிலைத் தோட்டத்திலும் சுற்றித் திரிந்து வந்ததால் அப்பகுதி மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க முள்ளிமலைப்பகுதியில் தேன் மற்றும் பழங்களைக் கூண்டுக்குள் வைத்து வனத்துறை அதிகாரிகள் கரடியைப் பிடித்தனர். பிடிபட்ட கரடியை வனத்துறை அதிகாரிகள் அப்பர் பவானி வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Exit mobile version