கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக இடம் ஒதுக்காததால் அதிருப்தி

கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதே இடங்களில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, அந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டு உறுப்பினர் பதவிகளில் 3 இடங்களைத் தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டிருந்தது. அதற்குப் பதிலாக ஒன்றாவது வார்டை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் 4 வார்டுகளில் திமுக வேட்பாளருக்குப் போட்டியாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒன்றாவது வார்டில் திமுக சார்பில் இளையராஜா என்பவரும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ராஜசேகரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் ஐஜேகேயினரும் பல இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திமுக கூட்டணியில் அதிருப்தியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version