இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டியில், 5க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 20 ரன்னிலும், மாயங்க அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடிய கே.எல். ராகுல் 64 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.

348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில், 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, நிதானமாக ஆடிய ஹென்றி நிக்கோல்ஸ் 78 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க ராஸ் டெய்லர் – டாம் லாதம் இணை இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.

லாதம் 69 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய ராஸ் டெய்லர் தனது 21 வது சதத்தை பூர்த்தி செய்தார். 48 புள்ளி 1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்த டெய்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version