டெல்லியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் 2 நாள் போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் லட்சக் கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு ஆதார விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சென்ற விவசாயிகள், ராமலீலா மைதானத்தில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிஷான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ள இந்த போராட்டம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. விவசாயிகள் நாளை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் ஆயிரத்து 500 பேர் பங்கேற்றுள்ளனர். அரை நிர்வாணக் கோலத்தில் ரயில் மறியல் போராட்டத்திலும் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர்.

 

Exit mobile version