ராஜபாளையம் என்றால் சட்டென நினைவுக்கு வருவது நாட்டு நாய்கள். ராஜபாளையத்தின் அடையாளமாக விளங்கி வரும் நாட்டு நாய்கள் வளர்ப்பில் அப்பகுதிளை சேர்ந்த படித்த இளைஞர்கள் ஈடுபட்டு லட்சக்கணக்கில் ஆண்டுவருமானம் பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம் என்றவுடன் அனைவரது நினைவுக்கும் வருவது இங்கு வளர்க்கப்படும் நாட்டு நாய் இனம் தான். இந்தியாவிலேயே சிறப்பான கம்பீரத்தோடு காட்சிதருவது ராஜபாளையம் நாய்கள். ஊரின் பெயரால் அழைக்கப்படும் இந்த நாய்கள், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.ராஜபாளையம் நாய்கள் சிறப்பான தோற்றத்தோடு சிறந்த குணாதிசயங்களையும் கொண்டுள்ளதால் இந்த நாய்களை வளர்க்க வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.மோப்ப சக்தி அதிகளவில் கொண்டுள்ளதாலும் வீட்டுக் காவலுக்கு உகந்ததாக உள்ளதாலும் ராஜபாளையம் நாய்களை வளர்க்க அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் படித்த இளைஞர்கள் பலர், பண்ணைகள் அமைத்தும் வீட்டிலேயே இந்த வகை நாட்டு நாய் இனங்களை வளர்த்து லட்சக்கணக்கில் ஆண்டு வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
ராஜபாளையம் நாய் இனங்களை வெளியூரிலிருந்து வாங்க வருபவர்களுக்கு நாய் குட்டியை பேருந்தில் ஏற்ற விதிகளின்படி அனுமதிக்க வேண்டும் என நாய் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவமனை மூலம் முறையான தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் அதிகமான நாட்டு நாய் வாழும் இப்பகுதிக்கு மருத்துவ வசதி செய்து தரவும் இப்பகுதி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையத்தின் அடையாளமாக உள்ள இந்த நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே நாய் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.