ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ ஹெராயின் போதைப் பொருள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சென்னையை சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில், ஆப்கானிஸ்தானிலிருந்து அந்த போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, சென்னை போரூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் தங்கியிருந்த சுதாகர்-வைசாலி தம்பதியை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர் விசாரணையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நால்வர் உட்பட, 8 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை தம்பதி குறித்து தமிழக போலீசாரும் விசாரணையை துவங்கினர். இதில், சுதாகர் மற்றும் வைஷாலி இருவரும், 8 ஆண்டுகளாக கொளப்பாக்கத்தில் தங்கி, ஆசி சோலார் சிஸ்டம் என்ற பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.

ஆப்கானிஸ்தான் ஹஸன் ஹுசைன் என்ற தனியார் நிறுவனம் மூலம், ஈரான் நாட்டு துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு டால்கம் பவுடரை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றதாகவும், இந்தியாவில் அமித் என்ற தரகர் மூலம், ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாவித் என்ற தரகரை தொடர்பு கொண்டு, இந்த இறக்குமதியில் ஈடுபட்டதாக சுதாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்படி அனுப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்களில் தான், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், முன்னதாக இதே நிறுவனத்தின் பெயரில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து டால்கம் பவுடர் என்ற பெயரில் பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளன. இந்நிலையில், அந்த பொருட்கள் போதைப்பொருள் தானா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, டெல்லி குல்தீப் சிங் என்பவர் பெயரில், இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. குல்தீப் சிங் என்பவர் பெயரில், இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நிறுவனத் தரகர் அமித் கூறியதன் அடிப்படையில், ஆவணங்கள் தயாரித்து இறக்குமதி செய்ததாகவும் சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விஜயவாடா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version