சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2' தொடருக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை உடனே நிறுத்த வேண்டும் என, இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு மெளனம் காப்பது மன வேதனை தருவதாக கூறியுள்ளார். மேலும், தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால் இந்த தொடர் எடுக்கப்பட்டிருப்பதை, அதில் இடம்பெற்ற காட்சிகள் உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்தின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக, மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்டுள்ள தொடரை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தொடரை உடனே தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள இயக்குநர் பாரதிராஜா, அமேசான் நிறுவனமும் தாமாக முன்வந்து தொடரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தை உலகெங்கும் உள்ள தமிழர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version