திருவொற்றியூரில் சாலை விபத்தில் பதினோராம் வகுப்பு மாணவி பலி

சென்னை திருவொற்றியூரில் சாலை விபத்தில், பதினோராம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூரைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகள் கோமதி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இவரும் தினேஷ் என்கிற இளைஞரும் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வளைவில் எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர்களின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தினேஷ், கோமதி ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பயனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்துப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version