சேலம் அருகே பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த மலை கிராமத்துக்கு, மின்வசதி ஏற்படுத்திக்கொடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருநூற்றுமலையில் இருக்கும் மலைக்கிராமங்களில் ஒன்று பள்ளிக்காடு. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மின்வசதியின்றி வசித்து வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து மக்களின் தேவையை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த 51 மலைக்கிராமங்களுக்கு மின்வசதி வழங்க கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் தீனதயாள் திட்டத்தின் கீழ் 32 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்காடு கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரவசதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர், ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.