சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் சேட்டுர் கிராமத்தில் இதுவரை மின்சாரமே பார்த்திடாத மக்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுவாச்சூர் சேட்டுர் புதூர் மலை கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மின்சாரம் வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராம மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மின்சாரம் வசதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை பரிசீலித்த நிலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மின் கம்பங்கள் அமைத்து 40 லட்சம் ரூபாய் செலவில் மலை கிராம மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் கோரிக்கையை பரிசீலித்து மின்சாரம் வழங்கிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கிராம மக்கள் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.