அதிமுக மகளிர் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அதிமுக அரசுக்கு தங்கைகளே பலம் என்பதை உணர்த்த தேர்தல் களம் இறங்குங்கள் என, அதிமுக மகளிர் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசுக்கு தங்கைகளே பலம் என்பதை உணர்த்த மகளிர் அணியினர் களம் இறங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். ஆண் ஆதிக்க அரசியல் மேலோங்கி இருந்த காலத்திலேயே பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெண் இனத்தின் உயர்வுக்காக வகுத்து தந்த திட்டங்கள் ஏராளம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் அதிமுகவின் உயிர்நாடி தாய்மார்கள்தான் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகமே தனக்கு வேலி என்னும் தவத்தால் வாழ்ந்திட்ட நம் அம்மாவுக்கு ஒட்டுமொத்த மகளிரினம் நன்றி செலுத்த வேண்டும் என்றும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், இரட்டை இலை சின்னமே வாகை சூடவும், எனதருமை கழக மகளிரணி சகோதரிகள் அருந்தொண்டாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். தாய்மார்களின் ஓட்டுகளை கடுகளவும் குறையாது கொண்டு வந்து சேர்த்திட, கழக மகளிர், சிப்பாய் படைகளைப் போல களப்பணி ஆற்ற வேண்டுமென அன்பு சகோதரனாய் கட்டளையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை குவிக்க அதிமுக மகளிர் அணியினர் உடனே களம் இறங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version