“திமுகவுக்கு பொய்யே மூலதனம், ஆனால் அதிமுகவுக்கு பத்தாண்டு சாதனைகள்தான் மூலதனம்"

திமுகவுக்கு பொய்யே மூலதனம், ஆனால் அதிமுகவுக்கு பத்தாண்டு சாதனைகள்தான் மூலதனம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து, காந்தி ரோடு பகுதியில் முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஸ்டாலின் பிரசாரம் செய்துவருவதாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பப்போவதில்லை, அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.

திமுக ஆட்சி என்றாலே ரவுடி ராஜ்ஜியம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர், கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் நிறைந்த கட்சி திமுக என்றார். அதிமுக ஆட்சியில் ஜாதிச்சண்டை, மதச்சண்டை இல்லாமல் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதாக கூறிய முதலமைச்சர், பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 954 கிலோமீட்டர் நீள மழைநீர் வடிகால் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் சென்னையில் மூவாயிரம் இடங்களில் மழைநீர் தேங்கியதை, தற்போது வெறும் 33 இடங்களாக குறைத்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரம் தொழில்துறையில் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அந்த நிலை தொடர மக்கள் இரட்டை இலைக்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version