மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கும் காலம் நீட்டிப்பு

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9 புள்ளி 5 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பாண்டில் 12 நாள் தாமதமாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. இன்று அணையில் இருந்து நீர்திறப்பு நிறுத்தப்படும் நிலையில், நீர் திறப்பிற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, ஜனவரி 15-ஆம் தேதி வரை கூடுதலாக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 817 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 118 புள்ளி 83அடியாகவும், நீர் இருப்பு 91 புள்ளி 61 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய்ப் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

Exit mobile version