மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்படும்!

குறைந்த அளவிலான பயணிகளுடன் உள்நாட்டு விமான சேவையை, வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மார்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு பயணிகள் விமானம் இயக்கப்படாத நிலையில், தற்போது குறைந்த அளவிலான பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமான சேவை துவங்குமென குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக குறைந்த அளவிலான பயணிகளுடன் மிகுந்த பாதுகாப்புடன் விமான சேவை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version