இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் தீபாவளி பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் தேவை: சத்யபிரதா சாஹூ

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சத்யபிரதா சாகு, நாங்குநேரி,விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும், அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், பரிசு பொருட்களை உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம் என்றும், ஆவணம் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

செலவின பார்வையாளர்கள், துணை ராணுவ படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறிய சாகு, இரண்டு தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினரும் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.விக்கிரவாண்டியில் 139 இடங்களில் 275 வாக்குசாவடிகளும், நாங்குநேரியில் 170 இடங்களில் 299 வாக்குசாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார்.

Exit mobile version