கொரோனா தொற்றால் தொடரும் துயரம் – 8 மாத கர்ப்பிணி மருத்துவர் பலி!

தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த கர்ப்பிணியான 29 வயது மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயிற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. கணவர் கார்த்திக் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றின் தீவிரத்தால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்ட அவர், வானகரம் அப்போலோ மருத்துவனையில் இருந்து கிரீம்ஸ் ரோடு அப்போலோவிற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான கர்ப்பிணி சண்முகப்ரியா, கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version