வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் திமுகவினர் அராஜகம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக வினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று திருச்செங்கோடு அருகே பன்னீர்குத்தி பாளையத்தில் தி.மு.க.வினர் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றனர்.

பன்னீர்குத்தி பாளையம் குடிசை வீடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், பட்டாசு வெடித்தால் எளிதில் தீபற்றும் என, அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் குடிபோதையில் இருந்த திமுகவினர் இதனை கண்டு கொள்ளவில்லை. மேலும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கூறிய பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரகளையில் ஈடுபட்ட திமுகவினர் தட்டிக்கேட்ட பெண்களை அடித்தும், சாதி பெயரை கூறி தரக்குறைவாக பேசியதும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களை பயங்கர ஆயுதங்கள் கொண்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி, அப்பகுதியை போர்க்கலமாக மாற்றியுள்ளனர்.

திமுக-வினர் தாக்கியல் பன்னீர்குத்தி பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு, மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.

அப்போதும் விடாமல் போதையில் இருந்த திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறனர்.

சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை தடுக்க முயன்றும், போதையில் இருந்த திமுகவினரை தடுக்க முடியவில்லை.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், முகசுளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version